search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குவியலாக போடப்பட்டுள்ள தேங்காய்கள்
    X
    குவியலாக போடப்பட்டுள்ள தேங்காய்கள்

    விலை வீழ்ச்சி எதிரொலி -நெகமம் பகுதியில் உரிக்காமல் குவியலாக போடப்பட்டுள்ள தேங்காய்கள்

    ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை விற்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    நெகமம் :

    நெகமம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னையில் இருந்து தேங்காய், கொப்பரை, மஞ்ச  நார் உள்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    விவசாயிகளின் தோட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தேங்காய் ரூ.13 வரை விற்பனை ஆனது. மேலும் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் கடும் சிரமம் அடைந்து வந்தனர். ஓரளவு விலை கிடைத்ததால் விவசாயிகள் சமாளித்தனர்.

    இந்த நிலையில் தேங்காய் விலை திடீரென்று வீழ்ச்சி அடைந்தது. தற்போது ஒரு தேங்காய் ரூ. 10-க்கு விற்பனை ஆகிறது. இதனால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
     
    இதன் காரணமாக நெகமம், கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, வடசித்தூர், காட்டம்பட்டி, எம்மே கவுண்டன்பாளையம், ஆண்டிபாளையம், செட்டியக்காபாளையம், சின்னநெகமம், ஆவலப்பம்பட்டி, தேவணாம்பாளையம், மற்றும் பல்வேறு இடங்களில் விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்துள்ள தேங்காய்களை உரிக்காமல் அப்படியே குவியாலாக போட்டு வைத்து உள்ளனர். 

    ஒவ்வொரு தென்னந்தோப்புகளிலும் 30 ஆயிரம் முதல்,  70 ஆயிரம் வரை தேங்காய்கள் உரிக்காமல் அப்படியே தேக்கி வைத்துள்ளனர். இதனால் மலைபோல் தேங்காய்கள் குவிந்துள்ளன. இதன் காரணமாக வெளிமார்க்கெட்டில் தேங்காய் விலை அதிகரித்து வருகிறது. 

    இது குறித்து தென்னை விவசாயி ஒருவர்  கூறியதாவது;-

    பொள்ளாச்சி தாலுகா பகுதியில் தென்னை சாகுபடி பாதிப்படைந்து வருகிறது. ஆட்கள் பற்றாக்குறை, விளை நிலங்கள் வீடுகளாக மாறும் அவலம் போன்றவற்றால் நலிவடைந்து வரும் இந்த நேரத்தில் தேங்காய் விலையும் கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. 

    ரூ.13 க்கு விற்பனை ஆன தேங்காய் தற்போது ரூ. 10-க்கு தான் விற்பனை ஆகிவருகிறது. விலை உயரும் என்ற நம்பிக்கையுடன் தேங்காய்களை உரிக்காமல் தோப்பகளில் அப்படியே வைத்துள்ளோம். தேங்காய் விலை வீழ்ச்சிக்கு காரணம் வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதுதான். தேங்காய் எண்ணெய்க்கு பதில் பாமாயில் பயன்படுத்துவதால்தான் தேங்காய் விலை குறைந்து வருகிறது. எனவே ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தால் தான் தேங்காய் விலை உயர வாய்ப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    Next Story
    ×