search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட்டமலைக்கரை அணை.
    X
    வட்டமலைக்கரை அணை.

    வட்டமலைக்கரை அணையில் இருந்து 2-வது முறையாக தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

    கடந்த 1980 முதல் 1991 வரை இரு முறை அணை நிரம்பி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின் கடந்த 1996 க்கு பிறகு தண்ணீர் வரத்து இல்லாததால் அணை காய்ந்து போனது.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் 700 ஏக்கர் பரப்பளவில், வட்டமலைகரை ஓடையை தடுத்து அணையானது 34.5 அடி உயரத்தில் 24.75 அடி தண்ணீர் தேங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 

    மேலும் அணையில் 0.27 டி.எம்.சி இருப்பு வைக்கும் வகையிலும், 6043 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் இடது வலது கால்வாயுடன் கடந்த 1980 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

    கடந்த 1980 முதல் 1991 வரை இரு முறை அணை நிரம்பி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின் கடந்த 1996 க்கு பிறகு தண்ணீர் வரத்து இல்லாததால் அணை காய்ந்து போனது. விவசாயிகள் தொடர்ந்து தண்ணீர் திறக்க கோரி போராட்டம் நடத்தி வந்தனர்.

    பி.ஏ.பி கால்வாயில் உள்ள கள்ளிபாளையம் ஷட்டரில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என பாசன விவசாயிகள் மற்றும் வெள்ளகோவில் பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பல்வேறு கட்ட கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    பி.ஏ.பி., பாசன விதிகளின்படி பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு அனைத்து சுற்று தண்ணீர் வழங்கப்பட்டு, உப்பாறு அணையும் நிரம்பினால் வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் திறக்கலாம் எனும் அரசாணை அடிப்படையில், கடந்த நவம்பர் இறுதியில் திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பி.ஏ.பி. பகுதிகளில் நீர் தேவை குறைந்தது.

    மேலும் தொடர் மழையால் உப்பாறு அணையும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனை‌ தொடர்ந்து வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த நவம்பர் 28-ந்தேதி கள்ளிபாளையம் மதகில் இருந்து வினாடிக்கு 300 கன அடி வீதம் நீர் திறந்து விட்டனர். அணைக்கு தண்ணீர் வரும் வழியில் உள்ள 23 தடுப்பணைகள் நிரம்பி, 3 நாட்கள் கடந்து டிசம்பர் 1-ந் தேதி மதியம் அணைக்கு தண்ணீர் வந்தடைந்தது.

    அணை கடந்த 25 ஆண்டுகளாக வறண்டு கிடந்த நிலையில்அணையில் அப்போது 80 நாட்களாக 22 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் அணையை சுற்றியுள்ள காங்கேயம் பாளையம், செட்டிபாளையம், தாசவநாய்கன்பட்டி, உத்தமபாளையம், நாகமநாய்க்கன்பட்டி, மயில்ரங்கம் ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகள், ஊராட்சி ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது.

    அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி 6 -ந் தேதி முதல் பிப்ரவரி 23-ந் தேதி வரை இடது மற்றும் வலது புற கால்வாய்களில் 145 மில்லியன் கன அடிக்கு மிகாமல் மூன்று சுற்றுகளாக இடைவெளி விட்டு 21 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    இந்த நீர் திறப்பின் மூலம் முலையாம்பூண்டி, குமாரபாளையம், அக்கரைபாளையம், நாச்சிபாளையம், மயில்ரங்கம் பகுதிகளில் உள்ள 6043 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் அமலில் இருந்ததாலும், வாய்க்கால்கள் தூர் வருவதில் தாமதம் ஏற்பட்டதாலும் தண்ணீர் திறக்கவில்லை.

    கடந்த மார்ச் 9 -ந் தேதி வட்டமலைக்கரை ஓடை தடுப்பணையில் இருந்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாசனத்துக்காக நீரை திறந்து வைத்தார். இடது மற்றும் வலது புற பிரதான கால்வாய் வழியாக, வினாடிக்கு 40 கன அடி வீதம் இரு வாய்க்காலில் நீர் அப்போது திறக்கப்பட்டது. மொத்தம் 3 சுற்றுகளாக 21 நாட்களுக்கு உரிய கால இடைவெளியில் நீர் திறக்கப்பட்டது.

    இதன் மூலம் வெள்ளகோவில், முலையாம்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 6049 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்றன. கடந்த 25 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இன்றி வறண்டு கிடந்த வட்டமலைக்கரை அணையில் நீர் இருப்பு வைக்கப்பட்டு,1997ம் ஆண்டுக்கு பின் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தற்போது அணையில் 8.35 அடிக்கு நீர் இருப்பு உள்ள நிலையில்கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் கோடை வெப்பத்தின் காரணமாக வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது‌. இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க செய்தித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

    அதன்படி நேற்று முன்தினம் முதல் வருகிற சனிக்கிழமை வரை 5 நாட்களுக்கு இடது மற்றும் வலது பிரதான வாய்க்காலில் வினாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து விட்டனர். அணையில்  தற்போதைய நிலவரப்படி 8.35 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. 

    அணைக்கு நீர் வரத்து இல்லை. 25 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வட்டமலைக் கரை ஓடை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×