என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    குன்னூர் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

    குன்னூர் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அதிகளவிலான வனப்பகுதியை கொண்டதாகும்.

    இங்கு யானை, காட்டெருமை, மான், கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி வனத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது.அவ்வாறு புகும் வனவிலங்குகள் அங்கு மக்கள் வசிக்க கூடிய வீடுகள், அவர்கள் விளைநிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

    குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சியில் பில்லூர் மட்டத்தில் பவானி எஸ்டேட் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 40). தொழிலாளி. இவருக்கு ஜானகி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    முருகன் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். பின்னர் இரவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக குடியிருப்பையொட்டிய வனப்பகுதிக்குள் சென்றதாக தெரிகிறது.

    அப்போது அங்கு புதருக்குள் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென முருகனை தாக்க தொடங்கியது. யானையை பார்த்ததும் பதறிபோன முருகன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் யானை விரட்டி வந்து அவரை தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அவரது சத்தம் கேட்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அப்போது அங்கு அவர் இறந்து கிடந்தார். அவரது உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதனர். தகவல் அறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×