என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே பள்ளிப்பட்டு கிராம ஏரி நீரோடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் பள்ளிப்பட்டு ஏரியில் இருந்து சூளாங்குறிச்சி ஏரிக்கு தண்ணீர் செல்லும் ஓடை உள்ளது. அந்த ஓடை வழியாக அதை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் அறுவடை செய்யப்படும் விளைபொருட்களை விவசாயிகள் எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் ஓடையை சிலர் ஆக்கிரமித்திருந்ததால் தண்ணீர் பாய்ந்தோடுவதற்கும், அறுவடை செய்த விளை பொருட்களை வெளியே கொண்டு செல்வதற்கும் சிரமமாக இருந்தது. எனவே ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயி மாரிமுத்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதன்பேரில் சங்கராபுரம் வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியை தொடங்கினர். தொடர்ந்து ரிஷிவந்தியம் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், பள்ளிப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார், நில அளவையாளர் ஜெயவேல் மற்றும் அலுவலர்கள் அளவீடு செய்து பொக்லைன் எந்திரம் மூலம் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது, அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






