என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வலிவலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
    X
    வலிவலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

    சாராய வியாபாரிகளை கைது கோரி முற்றுகை போராட்டம்

    நாகை அருகே சாராய வியாபாரிகளை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த இறையான்குடி கிராமத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராம மக்கள் ஒற்றுமையால் இந்த பகுதியில் கள்ளச் சாராயம் இல்லாமல் இருந்து வந்துள்ளது.
     
    இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து சட்டவிரோதமாக கள்ளச்-சாராயம் கடத்தி வரப்பட்டு பாக்கெட் சாராயம் இறையான்குடி மற்றும் சிங்கமங்கலம் கிராமத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் பல முறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் வலிவலம் காவல் நிலையத்தில் புகாரளிக்க இறையான்குடி கிராமத்-தைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கிராம பொது-மக்கள் திரண்டனர். 

    அப்பொழுது சாராயம் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்ய கோரி கண்டன முழக்கங்களை எழுப்பியபடி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    காவல் நிலையத்தில் யாரும் புகார் தெரிவித்தால் அவர்களைக் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுப்பதாகவும், மேலும் அவ்வழியே செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவதால் அவர்களது நலன் கருதி உடனடியாக விற்பனையை தடுத்து நிறுத்தக்கோரி கிராம மக்கள் காவல்துறையினரிடம் முறையிட்டனர்.

    பொதுமக்களிடம் பேச்சு-வார்த்தை நடத்திய வலிவலம் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் நீண்ட விடுப்புக்கு பிறகு பணிக்குச் சேர்ந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் சாராய விற்பனை தொடர்பான புகார் வந்துள்ளதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
     
    புகார் அளிக்க வந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×