என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான விக்னேஷ், கலையரசன்.
தொழில் அதிபர் கடத்தல்
மதுரையில் மீட்கப்பட்ட தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் தர்மராஜ். நிதிநிறுவனம் நடத்திவரும் இவர் பொதுமக்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாககூறி பல கோடி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.
அதன் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் இந்த வழக்கு விசாரணை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தர்மராஜ், தனது வக்கீலை காரில் சிவகங்கைக்கு அழைத்துச் சென்றார்.
பின்பு தர்மராஜ் தனதுகாரில் திரும்பி செல்லும் போது மற்றொரு காரில் வந்த 5 பேர் கும்பல், அவரை காருடன் கடத்தி சென்றது. இதுகுறித்து சிவகங்கை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் தர்மராஜை போலீசார் தேடி வந்தனர். அவரை தனிப்படை போலீசார் மதுரையில் மீட்டனர்.
அவரை கடத்திச் சென்ற 3 பேர் தப்பிவிட்ட நிலையில் சிவகங்கையை அடுத்த ஒக்கூரைச் சேர்ந்த கலையர சன் (36), கூத்தாண்டன் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பிடிபட்ட கலையரசன் மற்றும் 76 பேர் தர்மராஜ் நடத்தி வந்த நிதிநிறுவனத்தில் பணம் முதலீடு செய்திருப்பதும், அதனை அவர் திருப்பித்தராததால் கடத்தியது தெரியவந்தது.
இந்த வழக்கில் மேலும் 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
Next Story






