என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியை விபத்தில் பலி
திருமங்கலம்:
மதுரை பசுமலை ஜோன்ஸ்புரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் பிரெட்ரிக் சாமுவேல். இவரது மனைவி நான்சி லெனிட்டா ராணி (வயது 34).
இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று காலை நான்சி லெனிட்டா ராணி நாகமலை புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வற்காக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.
அவர் பசுமலையில் இருந்து திருமங்கலம்-திண்டுக்கல் 4 வழிச்சாலை வழியாக சென்றார். தோப்பூர் 100 அடி கொடிக்கம்பத்தின் அருகே நான்சி லெனிட்டா ராணி சாலையை கடக்க முயன்றார்.
அப்போது நெல்லையில் இருந்து மதுரை நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் ஆசிரியை நான்சி லெனிட்டா ராணி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. மேலும் அதே வேகத்தில் சென்று நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் நான்சி லெனிட்டா ராணி தூக்கி வீசப்பட்டார். சினிமாவில் வரும் சம்பவம் போல் நடந்த விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.
ஆனால் தலையில் பலத்த காயம் அடைந்த நான்சி லெனிட்டா ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பள்ளத்தில் கவிழ்ந்த காரில் பயணம் செய்த மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த பாலாஜி (35), கார்த்திகா (30), அவர்களது 1½ வயது குழந்தை ஆகியோரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்த ஆசிரியை நான்சி லெனிட்டா ராணி உடல் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.






