என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன்
    X
    கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன்

    வருகிற 24-ந்தேதி மத்திய மந்திரி அமித்ஷா புதுவை வருகிறார்- கவர்னர் தமிழிசை தகவல்

    சிறுதானியங்களில் எல்லாவிதமான ஊட்டச்சத்துகளும் உள்ளது. மத்திய அரசு சிறுதானிய ஆண்டு கொண்டாட உள்ளது. உடல் பயிற்சி போல உணவுப்பயிற்சியும் முக்கியம்.

    புதுச்சேரி:

    உலக உடல்நல தினத்தையொட்டி இந்திய தொழில் கூட்டமைப்பின் புதுவை கிளை சார்பில் இன்று நடை பயிற்சி (வாக்கத்தான்) நடந்தது.

    கவர்னர் மாளிகை எதிரே நடைபயிற்சியை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அவர்களிடையே கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    உலக உடல், மனநலம் பேண வேண்டும் என உலக உடல்நல நாள் கொண்டாடப்படுகிறது. மக்களுக்கு உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு தேவை. உடல்நலம் என்ற அஸ்திவாரத்தின் மீதுதான் சாதனை என்ற கட்டிடத்தை எழுப்ப முடியும்.

    அனைவருமே காலையில் எழுந்தவுடன் உடல்நலத்தை பேண யோகா செய்ய வேண்டும். பிரதமர் உலக உடல்நல நாளில் இருந்து 75 நாட்கள் யோகா செய்து ஜூன் 23 யோகா தின விழாவை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    யோகா உடல்நலம், மன நலத்த பேணும். மனம் ஒரு குரங்கு. அதை கட்டுப்படுத்துவது கடினமான காரியம். மனக்கட்டுப்பாடு எந்த துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் முக்கியம். நாம் இன்று சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    சிறுதானியங்களில் எல்லாவிதமான ஊட்டச்சத்துகளும் உள்ளது. மத்திய அரசு சிறுதானிய ஆண்டு கொண்டாட உள்ளது. உடல் பயிற்சி போல உணவுப்பயிற்சியும் முக்கியம். கரன்சியை எண்ணுவதைப்போல கலோரியை எண்ணி சாப்பிட வேண்டும்.

    விஞ்ஞானப்பூர்வமாக நம் உடலை பாதுகாக்க வேண்டும் என இன்று சபதமேற்க வேண்டும். சக்தியை அதிகரித்தால் 24 மணி நேரத்தை 48 மணி நேரமாக்கி உழைக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பிரதமர், உள்துறை மந்திரியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இருவரும் புதுவை மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். பிரதமர் புதுவை வளர்ச்சிக்காக பக்கபலமாக இருப்பதாக உறுதியளித்துள்ளார். பல திட்டங்களை கொண்டுவரவும் ஊக்கமளித்துள்ளார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 24-ந்தேதி புதுவை வருகிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வர உள்ளார். நிதி மந்திரி, ரெயில்வே மந்திரியையும் சந்தித்தேன். முதல்-அமைச்சருடன் இதுகுறித்து ஆலோசித்தேன்.

    புதுவை மக்களுக்கு பல திட்டங்களை கொண்டுவரவும், நிதியை பெறவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் இந்த சந்திப்பு பயனுள்ளதாக அமையும். புதுவை மிகப்பெரும் வளர்ச்சி பெறும். இதற்கு தேவையான பல திட்டங்களை கொண்டுவருகிறோம். கொரோனா இல்லாத மாநிலமாக புதுவை மாறியுள்ளது. புதுவை மக்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பாராட்டுக்கள். இன்னும் சில காலம் கைகளை கழுவுவது, முக கவசம் அணிவதை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதையும் படியுங்கள்... விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டு தடை - ஆஸ்கர் அமைப்பு அறிவிப்பு

    Next Story
    ×