என் மலர்
உள்ளூர் செய்திகள்

செடியிலேயே வீணாகி வரும் சின்னவெங்காயம்.
தாளவாடியில் செடியிலேயே வீணாகி வரும் சின்னவெங்காயம்
விலை வீழ்ச்சி காரணமாக தாளவாடி பகுதிகளில் செடியிலேயே சின்ன வெங்காயம் வீணாகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தாளவாடி:
விலை வீழ்ச்சி காரணமாக தாளவாடி பகுதிகளில் செடியிலேயே சின்ன வெங்காயம் வீணாகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங் களான கொங்கள்ளி, பனக ஹள்ளி,தொட்ட காஜனூர் பாரதி நகர், கெட்டவாடி, தலமலை அருள்வாடி போன்ற 40&க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டை கோஸ், சின்னவெங்காயம், பீன்ஸ் ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இவற்றை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.6 முதல் ரூ.8 விலை கொடுப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தாளவாடி விவசாயிகள் கூறியதாவது: 3 மாத பயிரான சின்ன வெங்காயம் 1 ஏக்கருக்கு விதை வெங்காயம், களை எடுத்தல், உரம் மருந்து என ரூ.80 ஆயிரம் வரை செலவு ஆகிறது. அதுவும் ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ.70 கொடுத்து வாங்கி ஏக்கருக்கு விதை வெங்காயம் ரூ 30 ஆயிரத்துக்கு வாங்கி நடவுசெய்தோம். கடந்த மூன்று மாதம் முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.30 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தார்.
ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ8 வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். சில விவசாயிகள் அறுவடை கூலி கிடைக்காது என அறுவடை செய்யாமல் தோட்டத்தில் அப்படியே விட்டுவிட்டனர்.
இதன் காரணமாக செடிகளிலேயே சின்னவெங்காயம் வீணாகி வருகிறது. வியாபாரிகள் விளைச்சல் அதிகம் எனக்காரணம் கூறி குறைவான விலைக்கு கேட்கின்றனர்.
பயிர்களுக்கு செலவு செய்த அசல் தொகை கூடகிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
Next Story






