என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் ராட்சத குழாய் மூலம் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஏரிக்கு மேட்டூர் அணை, பருவகாலங்களில் பெய்யும் மழை மூலம் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. இந்த தண்ணீரை வைத்து வீராணம் ஏரியின் பாசன பகுதியில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை முடிந்து உளுந்து பயறு விதைத்துள்ளனர்.
மேலும் கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கியது என்றாலும் சென்னை மாநகருக்கு குடிநீர் அனுப்புவதை கருதி கீழ் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 42.70 அடியாக உள்ளது. நேற்று 42.65 அடி தண்ணீர் இருந்தது. வீராணம் ஏரிக்கு 474 கன அடி நீர் வருகிறது.
சென்னைக்கு குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து நேற்று 62 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. அது இன்று 67 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.






