என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதியவர் சாவு
பஸ் படிக்கட்டில் முதியவர் தவறி விழுந்து சாவு
ராஜபாளையத்தில் பஸ்படிக்கட்டில் செல்போன் பேசியபடி சென்ற முதியவர் தவறிவிழுந்து பரிதாபமாக இறந்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் கடற்கரை(வயது 60). இவர் சொக்கநாதன்புத்தூரில் உள்ள செங்கல்சூளையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று பொருட்கள் வாங்குவதற்காக கடற்கரை பஸ்சில் ராஜபாளையம் சென்றார். பஸ் படிக்கட்டில் பயணம் செய்த அவர் செல்போனில் பேசிக்கொண்டே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக செல்போன் தவறி விழுந்தது.
படிக்கட்டிலேயே விழுந்த செல்போனை எடுப்பதற்காக கடற்கரை கீழேகுனிந்தார். அந்த நேரத்தில் வளைவில் பஸ் திரும்பியுள்ளது. இதனால் படிக்கட்டில் இருந்து கடற்கரை தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கடற்கரை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செங்கல்சூளை அதிபர் ரகுராம் கொடுத்த புகாரின்பேரில் சேத்தூர் புறக்காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






