என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேகதாது அணை கட்டுவதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி 15-ந் தேதி ஆர்ப்பாட்டம்
பண்ருட்டி:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசும், கர்நாடக அரசும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. காவிரியின் குறுக்கே 1000 கோடி ரூபாய்ச் செலவில் புதிதாக மேகதாது அணை ஒன்றைக் கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடக அரசு, அத்திட்டத்திற்கான செயல்பாடுகளை இந்தாண்டே தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.
மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் பாலைவனமாகும்.
காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமும் பாதிப்புக்குள்ளாகும். தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரைத் தரமறுக்கும் கர்நாடக அரசு இப்போது வந்துகொண்டிருக்கும் நீரையும் முடக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசின் மறைமுகத் துணையோடு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவிரி நதி மீதான எந்தவிதமானக் கட்டுமானம் செய்வதாக இருந்தாலும் நான்கு மாநிலங்களின் ஒப்புதலும் வேண்டும். ஆனால், தற்போது ஒன்றிய அரசு கொடுத்துள்ளதாகக் கூறப்படும் ஒப்புதல் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.
எனவே, நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழ் நாட்டு மக்களின் இயற்கை உரிமை பறிக்க முயற்சிக்கும், கர்நாடக மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக வருகிற 15 -ந் தேதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழர்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்படும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும், விவசாய அமைப்புகளும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறுஅவர் கூறியுள்ளார்.






