search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே உள்ள கொசவபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் துள்ளிக் குதித்த காளைகளை அடக்க முயன்ற வீரர்கள்.
    X
    திண்டுக்கல் அருகே உள்ள கொசவபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் துள்ளிக் குதித்த காளைகளை அடக்க முயன்ற வீரர்கள்.

    கொசவபட்டியில் ஜல்லிக்கட்டு- துள்ளிக்குதித்து வந்த காளைகளை மல்லுக்கட்டி அடக்கிய வீரர்கள்

    திண்டுக்கல் அருகே கொசவபட்டியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் துள்ளிக்குதித்து வந்த காளைகளை வீரர்கள் மல்லுக்கட்டி அடக்கினர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள கொசவபட்டியில் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று புனித உத்திரிய மாதா கோவில் வளாக மைதானத்தில் ஜல்லிக்கட்டு விழாவிற்கான வாடிவாசல், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினர்.

    அதன்படி இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. இதையடுத்து ஜல்லிக்கட்டு தொடங்கியது.

    முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

    சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. துள்ளிக்குதித்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.

    இதில் மாடுபிடி வீரர்கள் வெள்ளோட்டை சேர்ந்த அபிஷேக் (வயது 22), திருச்சியைச் சேர்ந்த ரூபன் (25), மாட்டின் உரிமையாளர்கள் நல்லாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (25), கோணப்பட்டியைச் சேர்ந்த சின்னராசு (50), தங்கப்பன் (27), பார்வையாளர் அலெக்ஸ் (37) ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர். இதில் திருச்சியை சேர்ந்த ரூபன் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்களுக்கு ஜல்லிக்கட்டு மைதானம் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டில் பங்கேற்று பிடிபடாத மாடுகள் மற்றும் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், தங்கக்காசு, வெள்ளிக்காசு, பிரிட்ஜ், ஆட்டுக்கிடா, அண்டா, பானை உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
    Next Story
    ×