என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
மாடுகள் வரத்து குறைவால் வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றம்
கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவால் வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
ஈரோடு:
கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவால் வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
ஈரோடு கருங்கல் பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த சந்தைக்கு கேரளா ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் கூடிய சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் வியாபாரம் சூடு பிடித்தது. ஆனால் இன்று கூடிய சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்து இருந்தாலும் மாடுகள் வரத்து குறைவாகவே இருந்தது.
இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வீரப்பூர் பகுதியில் உள்ள கோவில் திருவிழா நடந்து வருவதால் பெரும்பாலான மாடுகள் அங்கு சென்று விட்டன. இதனால் இன்று கருங்கல் பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவாகவே இருந்தது.
இன்று 350 பசுமாடுகள், 250 எருமை மாடுகள், 100 கன்றுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இன்று 90 சதவீத மாடுகள் விற்பனை ஆனது. பசு மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரைக்கும், எருமை மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரைக்கும், வளர்ப்பு கன்றுகள் ரூ.15 ஆயிரம் வரைக்கும் விற்பனையானது.
Next Story






