என் மலர்
உள்ளூர் செய்திகள்

பர்கூர் மலைப்பகுதியில் மாடுகளுக்கு தீவனம் வெட்ட சென்ற விவசாயியை கரடி தாக்கியது
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் மான், கரடி, யானை, செந்நாய் உள்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
இந்த நிலையில் பர்கூர் வனப்பகுதியையொட்டி உள்ள சோழகனை செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்தவர் ஈறையன் (50). விவசாயி. இவர் மாடுகளை வளர்த்து வருகின்றார். நேற்று மாலை அவர் சோளக்கணை செட்டில்மெண்ட் பகுதியில் மாடுகளுக்கு தீவனம் வெட்டுவதற்கு காப்புக்காடு என்ற பகுதிக்கு சென்றார்.
அப்போது அந்த பகுதியில் கரடி ஒன்று வந்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தப்பிக்க முயன்றார். ஆனால் ஈறையனை அந்த கரடி திடீரென தாக்கியது. இதனால் அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் வந்து கரடியை போராடி விரட்டினர். இதில் அவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
இது குறித்து பர்கூர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பர்கூர் வனச் சரக அலுவலர் மணிகண்டன், வனவர் அருண்குமார் ஆகியோர் தலைமையில் வனக்காவலர் வெங்கடேசன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் படுகாயம் அடைந்த ஈறையனை மீட்டு பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






