என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 100-க்கு கீழ் குறைந்தது

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 85 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு  மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 85 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். 

    பலர் உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

    அதன் பயனாக மாவட்டத்தில் பாதிப்பு குறைய தொடங்கியது. இந்நிலையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் அடைந்தது.
     
    இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று மாவட்டத்தில் வேகமாகப் பரவி மூன்றாவது அலையை ஏற்படுத்தியது. இதில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலர் பாதிக்கப்பட்டனர். 

    தினசரி பாதிப்பு ஆயிரத்து 400 வரை உயர்ந்தது. முதியவர்கள் பலர் உயிரிழந்தனர். தாக்கத்தை குறைக்கும் வகையில் மாவட்டத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

    தினசரி கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    மூன்றாவது அலையில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறியே இருந்ததால் அவர்கள் மருத்துவர்களின் பரிந்துரைபடி வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். 

    இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி, 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டது. 

    இதன் காரணமாக மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. 

    குறிப்பாக கடந்த ஒரு மாதமாக தினசரி பாதிப்பு ஒவ்வொரு நாளும் குறைந்து வருகிறது. 

    நேற்று முன்தினம் ஆயிரம் பேருக்கு மேற்கொண்ட சோதனையில் வெறும் 4  பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது. 

    ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து  822 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 85 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    மாவட்டத்தில் பாதிப்பு குறைந்து விட்டதால் மக்களிடம் கொரோனா பற்றிய அச்சம் குறைந்து விட்டது. பெரும்பாலான பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிந்து வருவதில்லை. இதேப்போல் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடை பிடிப்பதும் இல்லை. 

    மக்கள் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தி உள்ளனர். 

    இதேபோல் காய்ச்சல் சளி இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×