என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தை கடந்து செல்லும் மாணவர்கள்.
ரெயில்வே சுரங்கபாதை அமைக்காவிட்டால் போராட்டம்
வேதாரண்யம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வழியில் செண்பகராயநல்லூர்- மருதூர் இணைப்பு சாலையில் சுரங்க பாதை அமைக்க கோரி அப்பகுதி மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை அங்கு வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அந்த பாதை வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது. மேலும் இறந்தவர்களின் உடலை அவ்வழியாக தான் மயானத்திற்கு எடுத்து செல்ல வேண்டியுள்ளது.
எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பாதையில் சுரங்கபாதை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அங்கு சுரங்கபாதை அமைக்க பரிந்துரை செய்தும் இதுவரை சுரங்கபாதை அமைக்கும் பணி துவங்கப்படவில்லை.
இங்கு சுரங்க பாதை அமைக்கப்படாவிட்டால் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த அகல ரயில்பாதை திட்ட பணி முடிவடையும் நிலையில் இப்பகுதிக்கு சுரங்கபாதை அமைத்து தரவேண்டும்.
இல்லையென்றால் குடும்ப அட்டை, ஆதார் அட்டையை வேதாரண்யம் தாசில்தாரிடம் ஒப்படைக்கும் போராட்டம் விரைவில் நடத்த உள்ளோம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
Next Story






