search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகூர் தர்கா அலுவலகத்தில் வக்பு வாரியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்து சீல் வைக்கப்பட்டது
    X
    நாகூர் தர்கா அலுவலகத்தில் வக்பு வாரியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்து சீல் வைக்கப்பட்டது

    வக்பு வாரியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் நாகூர் தர்கா

    வக்பு வாரியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நாகூர் தர்காவில் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உலக புகழ்பெற்ற ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தலமான நாகூர் தர்கா, பரம்பரை அறங்காவலர்கள் 8 பேரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. 

    இந்த நிலையில் பரம்பரை அறங்காவலர்களில் ஒருவர் இறந்ததை அடுத்து, தர்காவை நிர்வாகம் செய்வதில் அறங்காவலர்களுக்குள் ஏற்பட்ட போட்டி மற்றும் முரண்பாடு காரணமாக, கடந்த 2017&ம் ஆண்டுமுதல் நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் ஆகியோர் இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.

    4 மாதங்கள் மட்டுமே இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளாக தர்கா நிர்வாகத்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. 

    இந்நிலையில், ஊழல் புகார்களுக்கு உள்ளான நாகூர் தர்கா இடைக்கால நிர்வாகிகள் அலாவுதீன் மற்றும் அக்பர் ஆகியோரை உயர்நீதிமன்றம் நீக்கம் செய்து, தமிழ்நாடு வக்பு வாரியத்திடம் பொறுப்புகளை ஒப்படைக்க உத்தரவிட்டது.

    ஆனால், இடைக்கால நிர்வாகிகள் பொறுப்புகளை ஒப்படைக்காத நிலையில் நாகூர் தர்கா அலுவலகம் வந்த தமிழ்நாடு வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலர் பரிதாபானு தலைமையிலான நிர்வாக அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். தர்கா வளாகம், தர்கா கட்டுப்பாட்டில் உள்ள நாகூர் மார்க்கெட் போன்றவைகளை நேரடி ஆய்வு மேற்கொண்ட அவர்கள் இடைக்கால நிர்வாகிகள் பயன்படுத்திய கோப்பு அலமாரிகள், பாதுகாப்பு பெட்டகம், அவர்களின் அறை உள்ளிட்டவைகளை 
    பூட்டி சீல் வைத்தனர்.

    மேலும், நீதிமன்றத்தால் நீக்கம் செய்யப்பட்ட இடைக்கால நிர்வாகிகள் அலுவல் பணிகள் மேற்கொள்ள தடை விதித்ததுடன், தர்கா நிர்வாகத்தை தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் கொண்டு வர வக்பு வாரிய ஆய்வாளர் ஒருவரை நியமனம் செய்துள்ளனர். 

    தொடர்ந்து ஊழல் புகார்களுக்கு உள்ளாகி நீக்கம் செய்யப்பட்டுள்ள இடைக்கால நிர்வாகிகள் அக்பர் மற்றும் அலாவுதீன் ஆகியோர் பதவி வகித்த காலங்களில் செய்யப்பட்ட செலவினங்கள் குறித்து, வக்பு தர்கா மேலாளர் உள்ளிட்ட ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×