என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    கவுந்தப்பாடி அருகே நகை பட்டறை உரிமையாளரிடம் போலீஸ் போல் நடித்து கொள்ளை

    கவுந்தப்பாடி அருகே நகை பட்டறை உரிமையாளரிடம் போலீஸ் போல் நடித்து ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கவுந்தப்பாடி:

    கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி. இவரது மகன் கானாஜி. வடமாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நகை உருக்கும் பட்டறை வைத்து நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தன்று கானாஜி மோட்டார் சைக்கிளில் ஈரோட்டில் இருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது கவுந்தப்பாடி, சித்தோடு, காஞ்சிக்கோவில் எல்லையோரம் அமைந்து உள்ள எல்லிஸ் பேட்டை என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு கார் வேகமாக வந்தது. பின்னர் அவரை வழிமறித்து நிறுத்தினர். காரில் இருந்து போலீஸ் சீருடையில் இறங்கியவர்கள் நாங்கள் போலீஸ்காரர்கள் உங்களை சோதனை செய்ய வேண்டும் என்று கேட்டனர்.

    தொடர்ந்து காரில் வந்தவர்கள் நகை பட்டறை உரிமையாளர் கானாஜியிடம் இருந்த பேக்கை திறந்து பார்த்தனர். அப்போது அதில் ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் ஒரு செல்போன் இருந்தது. அதை எடுத்துக் கொண்ட அவர்கள் மேலும் பையில் இருந்த 2 கிலோ தங்கத்தை எடுக்க முயன்றனர். அந்த நேரத்தில் பயிற்சி டி.எஸ்.பி. பிரியதர்ஷினியின் வாகனம் சைரன் ஒலித்தபடி வந்தது.

    இந்த சத்தத்தைக் கேட்டு சுதாரித்துக்கொண்ட கும்பல் வேகமாக தாங்கள் வந்த காரில் தப்பி சென்றனர். இதையடுத்து காரில் வந்தவர்கள் போலீஸ் போல் நடித்து தன்னிடம் பணம், செல்போன் பறித்து சென்றது கானாஜிக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் கவுந்தப்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    டி.எஸ்.பி.யின் வாகனம் சரியான நேரத்தில் வந்ததால் 2 கிலோ நகை தப்பியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×