என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
முதியவரின் உடலை வயலில் இறங்கி சுமந்து சென்ற கிராம மக்கள்
கிருஷ்ணகிரி அருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் இறந்து போன முதியவரின் உடலை கிராம மக்கள் வயலில் இறங்கி சுமந்து சென்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே சுடுகாட்டுக்கு செல்ல வழியில்லாததால் வயல் வரப்பு வழியாக உயிரிழந்த முதியவரின் உடலை தூக்கி செல்லும் அவலம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேவசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது பெரிய அக்ரஹாரம் கிராமம். இப்பகுதியில் சுமார், 70 குடும்பங்களுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு அதே பகுதியில் சுடுகாடு உள்ளது. ஆனால் அந்த சுடுகாட்டுக்கு செல்ல வழியில்லை.
சுடுகாட்டை சுற்றி நான்கு புறங்களிலும் தனி நபர்களுக்கு சொந்தமான வயல்வெளி உள்ளதால், வயல்களிலும, சேற்றிலும் இறங்கி சடலத்தை தூக்கி செல்லும் நிலை உள்ளது.இது குறித்து இப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
இந்த நிலையில் நேற்று பெரிய அக்ரஹாரம் பகுதியில் உயிரிழந்த முதியவரின் உடலை அவரது உறவினர்கள் சிரமப்பட்டு வயலில் இறங்கி, சேரும் சகதியுமான வரப்புகள் வழியாக தடுமாறி கொண்டு எடுத்துச் சென்றனர்.
மேலும் மழைக் காலங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கியிருக்கும் போது உடலுடன் தடுமாறி விழுந்து செல்வதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு சுடுகாட்டுக்கு உடலை எடுத்து செல்லும் வகையில் பாதை வசதி செய்து தரவேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






