என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
மின்சாரம் தாக்கி 3 பசு மாடுகள் உயிரிழப்பு
திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி 3 பசு மாடுகள் உயிரிழந்துள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் அருகே உள்ள தேவர்கண்டநல்லூர் ஊராட்சி நாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன். விவசாயி. இவர் பசு மாடு வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது மாட்டை அங்குள்ள ஒரு வயல்வெளியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்.
இதுபோல் அதே ஊரைச் சேர்ந்த சுதா மற்றும் ராஜாத்தி ஆகியோரும் தங்களது மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பியுள்ளனர். வயல்வெளியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது அந்த வழியே சென்ற உயர் மின் அழுத்த மின்சார கம்பி தாழ்வாக இருந்துள்ளது.
இதில் உரசியதில் மின்சாரம் தாக்கி 3 பேருக்கு சொந்தமான 3 பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டன. இது தொடர்பாக கலையரசன் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சப்&இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த 3 மாடுகளின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
தாழ்வாக செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகளை சரி செய்து ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இறந்த மாடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story