என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது
ஈரோடு மாட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. மேலும் பறக்கும்படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. மேலும் பறக்கும்படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு நாளைமறுநாள் 19-ந்தேதி நடக்கிறது.
ஈரோடு மாநகராட்சியில், 59 வார்டுகளில், 352 வேட்பாளர்கள், பவானி, கோபி, புன்செய் புளியம்பட்டி, சத்தியமங் கலம் ஆகிய 4 நகராட்சிகளில் 102 வார்டுகளில் 453 பேர், 42 பேரூராட்சிகளில் 610 வார்டுகளில், 1,919 வேட்பாளர்கள் என, 771 பதவிகளுக்கு, 2,724 பேர் போட்டியில் உள்ளனர்.
கடந்த 7-ந் தேதி முதல் தீவிர பிரசாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பிரசாரம்செய்தார்.
இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரும் பிரசாரம் செய்தனர்.
இதேபோல் தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ஈரோட்டில் பிரசாரம் செய்தார்.
உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு பிரசாரம் முடிக்க வேண்டும். அதன்படி இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.
இதையடுத்து இன்று காலை முதலே ஒவ்வொரு வேட்பாளரும் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கியமான சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மாவட்ட அளவில், 1,251 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 134 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை என்பதால், அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும், 55 நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் குடிநீர், மின்சாரம், கழிப்பறை, சாய்வு தளம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பதை மீண்டும் உறுதி செய்தனர். நாளை (வெள்ளிக்கிழமை) காலை முதல் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு, தேவையான பொருட்கள், உபகரணங்களுடன் அனுப்பி வைக்கவும், ஓட்டுப்பதிவு நாளில் ஓட்டுச்சாவடி மையத்தை தயார் நிலையில் வைக்கவும், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளதால் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாலையுடன் அவரவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபம், லாட்ஜ்களில் போலீசார் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் இன்று காலை பறக்கும் படையினர் அந்த வழியாக வந்த வாகனங்களில் சோதனை நடத்தினர்.
Next Story






