என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் குடியிருப்பு பகுதியில் புகுந்த 9 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு பிடிபட்டது
ஈரோடு:
ஈரோடு காந்திஜி ரோடு, தீயணைப்பு நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது.
அப்போது பாம்பு ஒன்று சென்றதை கட்டிட வேலை பார்க்கும் பணியாளர் ஒருவர் பார்த்தார். இது குறித்து மற்றவர்களுக்கும் தகவல் தெரிவித்தார். இதை கேள்விப்பட்டு அந்த பகுதியில் மக்கள் கூடிவிட்டனர். இதுகுறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த பாம்பை லாபகரமாக பிடித்தார். பிடிபட்ட பாம்பு 9 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு என தெரியவந்தது. ஆளுயர பாம்பை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் யுவராஜா அந்த பாம்பை ஈரோடு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
இதேப்போல் வெட்டு காட்டுவலசு பகுதியில் புதிதாக சைசிங் மில் கட்டும் பணி நடந்து வந்தது. அப்போது அந்த பகுதியில் பாம்பு செல்வதை பார்த்த மக்கள் இதுகுறித்து யுவராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கட்டிட இடிபாட்டில் பதுங்கி இருந்த 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாபகரமாக பிடித்தார்.
இதேபோல் அதே பகுதியில் ஒருவர் வீட்டில் மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பையும் பிடித்தார். கடந்த 2 வாரத்தில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 26 பாம்புகளை பிடித்ததாக யுவராஜா தெரிவித்தார்.






