என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
ஈரோடு பஸ் நிலையத்திற்குள் அதிவேகமாக வரும் பஸ்களால் பயணிகள் அச்சம்
ஈரோட்டில் காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஈரோடு பஸ் நிலையத்திற்குள் அதிவேகமாக வரும் பஸ்களால் பயணிகள் அச்சமடைந்து உள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஈரோடு பஸ் நிலையத்திற்குள் அதிவேகமாக வரும் பஸ்களால் பயணிகள் அச்சமடைந்து உள்ளனர்.
ஈரோடு பஸ் நிலையம் மாநகராட்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.இங்கு சேலம், நெல்லை, மதுரை, கோவை, சென்னை போன்ற மாவட்டகளுக்கு செல்ல தனித்தனி ரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு என 700-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் ஈரோடு பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி ரூ.41 கோடி மதிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இதற்காக சக்தி ரோடு பகுதியில் இருந்த 35 கடைகள், பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம், வடக்கு போக்குவரத்து அலுவலகம், மாநகராட்சியின் பயணிகள் தங்கும் விடுதி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
சேலம் ரேகைகள் பழுதடைந்து உள்ளதால் அவை மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு தடுப்புகள் வைத்து படைக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, நெல்லை செல்லும் பஸ் ரேக்கு இடித்து அகற்றப்பட்டது.
இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. இதனால் குறுகிய இடங்களில் மட்டும் அனைத்து பஸ்களும் வந்து நின்று செல்கின்றன.
ஈரோடு பஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் தாறுமாறாக சென்று வருவதால் பயணிகள், பொதுமக்கள் அச்சத்துடனேயே பஸ் நிலையத்திற்குள் சென்று வருகின்றன.
மேட்டூர் ரோடு வழியாக ஈரோடு பஸ் நிலைத்திருக்கும், அகில்மேடு வீதி வழியாக ஈரோடு பஸ் நிலையத்திற்கும் பஸ்கள் தாறுமாறாக உள்ளே வருகின்றன. எப்போது எங்கிருந்து பஸ் உள்ளே வருகிறது என்றே தெரியவில்லை. இதனால் முதியவர்கள், குழந்தைகளுடன் செல்லும் தாய்மார்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் பஸ் நிலையத்திற்குள் சில பஸ்கள் வேகமாக செல்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே ஈரோடு பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும், பஸ் நிலையத்திற்கு உள்ளே வருவதற்கு ஒரே வழியையும், பஸ் நிலையத்திலிருந்து வெளியே செல்வதற்கு ஒரே வழியை பயன்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பஸ்கள் அணிவகுத்து நின்றன.
Next Story






