என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலை
ஓசூர் அருகே வாலிபர் தலையை துண்டித்து கோவில் வாசலில் வீச்சு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வாலிபர் தலையை துண்டித்து கோவிலில் மர்ம கும்பல் வீசிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுக்கா பாகலூர் அருகே எலுவப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசப்பா. இவரது மகன் பிரதீப் (வயது25). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சந்திரிகா. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தையும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் சந்திரிகா, 4 மாதத்திற்கு முன்பு, 2-வது பிரசவத்திற்கு பெங்களூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றவர், அங்கேயே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பிரதீப் மற்றும் சிலர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மதுக்குடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், திடீரென பிரதீப் தலையை தனியாக அறுத்து படுகொலை செய்தனர். பின்னர் ஆத்திரம் அடங்காமல் அவரது தலையை ரத்தம் ரத்தம் சொட்ட... அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் வீசினர். பின்னர் அங்கிருந்து கும்பல் தப்பிசென்று விட்டனர்.
இன்று காலை மாரியம்மன் கோவிலுக்கு வந்த சிலர், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிரதீப் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாகலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
கோவில் வாசலில் துண்டிக்கப்பட்ட வாலிபர் தலையை மர்ம கும்பல் வீசிச்சென்ற சம்பவம், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தெரிய வந்தது. இதனால் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கோவில் வாசலில் திரண்டு நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே தகவல் அறிந்து பாகலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து துண்டிக்கப்பட்ட பிரதீப் தலை மற்றும் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
இந்த கொலை பற்றி தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, ஓசூர் ஏ.எஸ்.பி. அரவிந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.
வாலிபர் பிரதீப் கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது பற்றி பாகலூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பிரதீப்பை, 2-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து தலையை துண்டித்து கொலை செய்திருக்கலாம் என்று தெரிய வந்தது. இதனால் நள்ளிரவில் பிரதீப்பை மது குடிக்க அழைத்து சென்றவர்கள் யார்? என்று விசாரித்து வருகிறார்கள்.
மேலும் பிரதீப், கள்ளக்காதல் விவகாரத்தில் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது சொத்துப் பிரச்சி னையா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவிலில் வாசலில் வாலிபர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






