என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைதான கோபிநாத்
    X
    கைதான கோபிநாத்

    வரதட்சணையாக மனைவியின் தங்கையை திருமணம் செய்து தரக்கேட்ட டிரைவர் கைது

    பெரம்பலூரில் மாமனாரின் சொத்தை முழுவதும் அபகரிக்க வரதட்சணையாக மனைவியின் தங்கையை திருமணம் செய்து தரக்கேட்ட டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்- அமுதா தம்பதியின் மகன் கோபிநாத், டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ராஜேஸ்வரி (24) என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் கோபிநாத்துக்கு வரதட்சணையாக நகை, பணம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மகிழ்ச்சியுடன் திருமண வாழ்க்கையை புதுமண தம்பதியினர் தொடங்கினர். தற்போது ராஜேஸ்வரி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இதனிடையே கூடுதல் வரதட்சணையாக நகை, பணம், நிலம் ஆகியவற்றை வாங்கி வருமாறு ராஜேஸ்வரியை அவரது கணவர் கோபிநாத் மற்றும் அவரது மாமனார் நாகராஜ், மாமியார் அமுதா ஆகியோர் தினமும் வற்புறுத்தி வந்துள்ளனர். மேலும் தகாத வார்த்தையால் திட்டியும், அடித்தும் சித்ரவதை செய்து கொடுமைபடுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இருந்தபோதிலும் தற்போதைய தனது குடும்ப சூழ்நிலையில் கூடுதல் வரதட்சணை வாங்கி வரமுடியாது என்று ராஜேஸ்வரி திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் வீட்டார் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினர். இதனால் தற்போது ராஜேஸ்வரி தனது பெற்றோர் வீட்டில் உள்ளார்.

    மீண்டும் ராஜேஸ்வரியுடன் குடும்பம் நடத்துமாறு பெண் வீட்டார் சார்பில் கேட்டுக்கொண்டனர். அப்படியானால், ராஜேஸ்வரி வீட்டின் முழு சொத்தையும் அபகரிக்கும் விதமாக மனைவியின் தங்கையையும் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோபிநாத் வற்புறுத்தி உள்ளார்.

    அப்போதுதான் நீ என்னுடன் குடும்பம் நடத்த வர முடியும் எனவும், இல்லையென்றால் உங்கள் குடும்பத்தையே அழித்து விடுவேன் என கோபிநாத் மனைவி ராஜேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைக்கேட்ட ராஜேஸ்வரியின் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

    எனவே வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்தி சித்ரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்த கணவர் கோபிநாத், மாமனார் நாகராஜ், மாமியார் அகிலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஜேஸ்வரி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து வரதட்சணை கொடுமை செய்த கோபிநாத்தை கைது செய்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    Next Story
    ×