என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலியான பட்டாசு ஆலை தொழிலாளர்கள்
விருதுநகர் வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி
விருதுநகர் வெடி விபத்தில் படுகாயம் அடைந்த மற்றொரு தொழிலாளி இறந்ததால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள அம்மன்கோவில்பட்டி புதூரில் சிவகாசியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று மாலை பட்டாசு ஆலையில் இருந்த கழிவு பட்டாசுகளை தொழிலாளர்கள் சிலர் எரித்தனர். அப்போது அதில் கிடந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் பட்டாசு ஆலை தொழிலாளியான சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 50) என்பவர் பலத்த தீக்காயம் அடைந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் பட்டாசு ஆலை தொழிலாளியான அம்மன்கோவில்பட்டி புதூரை சேர்ந்த குபேந்திரன் (28), பட்டாசு ஆலை போர்மேன் சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்த தெய்வேந்திரன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் போலீசாரும் வந்தனர்.
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குபேந்திரன், தெய்வேந்திரன் ஆகிய இருவரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி குபேந்திரன் இன்று இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. தெய்வேந்திரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளரான செல்வம் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
Next Story






