என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாம்பரம் மாநகராட்சி தேர்தல்: வாக்கு சேகரிக்க வேட்பாளர் உட்பட 4 பேருக்கு மட்டுமே அனுமதி
தாம்பரம்:
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு இன்றுடன் துவங்கியது. இந்தநிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சியில் வேட்பு மனு இன்று முதல் வருகிற 4-ந் தேதி வரை தாக்கல் செய்யலாம் அதற்காக 7 தேர்தல் நடத்தும் உதவி அலுவலகங்கள் அமைக்கபட்டுள்ளது.
ஒன்று முதல் பத்து வார்டுகள் அனகாபுத்தூரிலும், 11 முதல் 20 வார்டுகள் பம்மல் பகுதியிலும், 21 முதல் 30 வார்டு பல்லாவரம் நகராட்சி அலுவலகத்திலும், 31 முதல் 40 வரை பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள பழைய தாசில்தார் கட்டிடத்திலும், 41 முதல் 50 வரை தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்திலும் 51 முதல் 60 வரை பெருங்களத்தூர் பேரூராட்சி அலுவலகத்திலும், 61 முதல் 70 வரை செம்பாக்கம் நகராட்சி அலுவலகத்திலும் மனு தாக்கல் செய்யலாம்.
தாம்பரம் மாநகராட்சி முழுவதும் 703 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும் அனைத்து வாக்கு மையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளர் அல்லது முன்மொழிபவர் என ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
வேட்பாளருடன் 4 பேர் சென்று வாக்கு சேகரிக்க அனுமதிக்கபடுவார்கள். வருகிற 31-ந் தேதி வரை பேரணி,சைக்கிள் பேரணி,திறந்தவெளியில் பொதுக்கூட்டங்கள் போன்றவை நடத்த தடை செய்யப்பட்டுள்ளது
உள்ளரங்கில் கூட்டம் நடத்த 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அனுமதி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். மாநகராட்சி முழுவதும் சுவர் விளம்பரம், சுவரொட்டிகள், பிளக்ஸ் பேனர்கள் போன்றவை வைக்க அனுமதி கிடையாது.
வேட்புமனு தாக்கல் முதல் வாக்குப்பதிவு வரை அனைத்தும் கேமராவில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் 7 தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஒன்று என்ற வீதத்தில் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி செய்வர் இதுபோல் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






