search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.10 கோடியில் ஆளில்லா விமானக் கழகம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    அனைத்து பல்கலைக் கழகங்களும் வெறுமனே பட்டம் வழங்கும் பல்கலைக் கழகங்களாக இல்லாமல் ஆராய்ச்சி நிறுவனங்களாக மாற வேண்டும். ஏராளமான கண்டுபிடிப்புகளை செய்து அவர்கள் அர்ப்பணிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பில் ஆளில்லா வான்வழி வாகன கழகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    பின்னர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    கல்வித்தகுதி அடிப்படையில் உங்களுக்கு பணிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. கல்வித்தகுதி அடிப்படையில் பணி கிடைத்த உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு கொடுத்த பணியை இதை விட வேறு யாரும் சிறப்பாக செய்துவிட முடியாது என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் பேர் பெற வேண்டும். அதற்கு நான் முன்கூட்டியே எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    யாருடைய வாரிசு என்பதற்காக இந்த பணி கிடைத்ததோ அவர்கள் இப்போது இருந்தால் பெருமைபடக்கூடிய அளவுக்கு நீங்கள் பணியாற்ற வேண்டும். உங்கள் குடும்பத்தினர் பெருமையை நிலை நாட்டும் வகையில் சிறப்பாக நீங்கள் செயல்பட்டு காட்ட வேண்டும்.

    இந்த விழாவில் தமிழ் நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தின் ஒரு மெகாவாட் சூரிய சக்தி மையத்தை தொடங்கி வைத்திருக்கிறேன். இங்கும் சூரிய சக்தியை தான் தொடங்கி வைத்து இருக்கிறேன். சூரியன் என்று சொன்னாலே அது சக்தி தான்.

    சூரியன் என்கிற சொல்லையும் சக்தி என்கிற சொல்லையும் யாராலும் பிரிக்க முடியாது. நான் அரசியல் பேசுவதாக யாரும் கருத வேண்டிய அவசியம் இல்லை. அது இப்போது தேவையும் இல்லை. சூரிய சக்தியை உருவாக்கக்கூடிய மையத்தை தான் நான் குறிப்பிட்டு காட்டுகிறேன். கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவன குழுமத்தின் நிதி உதவியோடு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 7.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூரிய சக்தி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

    நாளுக்கு நாள் மின்தேவை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அந்த தேவையை பூர்த்தி செய்ய சூரிய ஆற்றலை பயன்படுத்த வேண்டும். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தை போல அனைத்து பல்கலைக்கழகங்களும் இது போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். இதுபோன்ற முன்னோட்டமான முயற்சிகள் தொடர வேண்டும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக அனைத்து பல்கலைக் கழகங்களையும் நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

    அண்ணா பல்கலைக்கழகமானது பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மையங்களை உருவாக்கி வருவதை அறியும் போது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. எம்.ஐ.டி. வளாகத்தில் எரோநாட்டிக்கல் துறை சார்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வரிசையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் டிரோன் எனப்படும் ஆளில்லா வான்வெளி சிறிய ரக விமானத்தின் வடிவமைப்பையும் அதற்கான மாதிரிகளையும் தயாரித்து இருக்கிறார்கள். இதற்கு காரணமான ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோரையும் நான் பாராட்டுகிறேன். அவர்கள் எல்லோரையும் தனித்தனியாக பெயரை சொல்லி நான் பாராட்டியதாக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழக அரசின் நிதி உதவியால் இந்த வான்வெளி ஆராய்ச்சி மையம் பல்வேறு டிரோன்களை தயாரித்து வழங்கி வருகிறது. முதலில் இது காவல் துறையில் பயன் படுத்தப்பட்டது. பின்னர் வான்வெளியில் புகைப்படங்கள் எடுக்கவும், பேரிடர் மேலாண்மைக்கு சுரங்கங்களை அளவீடு செய்யவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுபோன்ற டிரோன்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டின் தொழில்நுட்ப முயற்சிகளுக்கு முன்மாதிரியாக அமைகிறது.

    அனைத்து பல்கலைக் கழகங்களும் வெறுமனே பட்டம் வழங்கும் பல்கலைக் கழகங்களாக இல்லாமல் ஆராய்ச்சி நிறுவனங்களாக மாற வேண்டும். ஏராளமான கண்டுபிடிப்புகளை செய்து அவர்கள் அர்ப்பணிக்க வேண்டும். தமிழகத்தில்தான் ஆற்றல் மிக்க இளைஞர் சக்தி அதிகம்.

    இந்தியாவில் இருக்கிற முக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் 30-க்கும் மேற்பட்டவை தமிழகத்தை சார்ந்தவைதான் என்பது அண்மைக் காலத்தில் தரவரிசை முடிவு நமக்கு சொல்லிக் கொண்டு இருக்கிறது.

    பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், உயர் ஆராய்ச்சி நிறுவனங்கள், தமிழ்நாட்டில் இருப்பதை போல எந்த மாநிலத்திலும் இல்லை.

    தமிழ்நாடு இளைஞர்கள் உலகத்தின் அனைத்து நாடுகளிலும் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். உயர் பொறுப்புகளை வகித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த இளைஞர்களை எல்லாம் தமிழ்நாட்டில் உள்ள உயர் கல்வியால் உயர்ந்த நிலைக்கு சென்றவர்கள். அந்த நிலையை இன்னும் கூடுதலாக உயர்த்த வேண்டும்.

    ஆய்வுகள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் இன்னும் அதிகமாக வேண்டும். வெளிநாடுகளில் இருக்கும் புதுவிதமான படிப்புகள், பட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் நாம் புகுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு குறித்த வகுப்புகள் இன்னும் முக்கியமானதாக சொல்லப்படுகிறது.

    டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, டிஜிட்டல் மார்க்கெட்டிங், கேம் தியரி, அண்டம் குறித்த ஆய்வுகள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இது போல நிறைய இருக்கிறது. இப்படி என்னென்ன படிப்புகள் எல்லாம் புதுமையாக வந்திருக்கிறதோ அவை அனைத்தையும் கற்க இன்றைய மாணவர்களை உயர் கல்வியானது அவர்களுக்கு ஊக்கமாக தூண்டப்படக்கூடிய நிலையில் இருக்க வேண்டும்.

    இதுகுறித்து உயர் கல்வித்துறை நிபுணர்கள், மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

    கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்கிற பட்டம் மட்டுமே நமக்கு போதாது. உயர் கல்வியில், ஆராய்ச்சி கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டத்தையும் நாம் பெற்றாக வேண்டும். அதை நோக்கி உயர் கல்வித்துறை செயல்பட வேண்டும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

    இதையும் படியுங்கள்... 20,453 குடியிருப்புகளை இடித்து அகற்ற பரிந்துரை- தொழில்நுட்ப நிபுணர் குழு அறிக்கை தாக்கல்

    Next Story
    ×