என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
ஈரோட்டில் கடும் குளிரால் பொதுமக்கள் அவதி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர், பவானிசாகர் போன்ற பகுதிகளில் கடும் குளிர் நிலவிவருகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர், பவானிசாகர் போன்ற பகுதிகளில் கடும் குளிர் நிலவிவருகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயில் அடித்து வருகிறது. அதே நேரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பனி காரணமாக கடும் குளிர் வாட்டி வருகிறது.வனப்பகுதிகளான தாளவாடி, ஆசனூர், தலமலை, தொட்டகாஜனூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனியால் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
மேலும் காலை வரை இருட்டாக காணப்படுகிறது. மலைப் பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் காலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டப் படியே சென்று வருகின்றனர்.
மலை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அதிகாலையிலே எழுந்து வேலைக்கு செல்வார்கள். ஆனால் கடும் குளிர் காரணமாக பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே வர தயக்கம் காட்டி வருகிறார்கள்.
ஒரு சிலர் ஸ்சுவட்டர் மற்றும் குல்லா அணிந்து கொண்டு வெளியில் செல்கின்றனர். மலைப்பகுதிகளில் மாலை நேரத்திலேயே குளிர் அடிக்க தொடங்கி விடுகிறது. நேரம் செல்ல செல்ல நள்ளிரவில் கடும் குளிர் காணப்படுகிறது.
மேலும் அந்தியூர் அடுத்த பர்கூர் மற்றும் சுற்று வட்டார மலைப்பகுதிகளில் பனி காரணமாக இரவு மற்றும் நள்ளிரவு முதல் காலை 8 மணி வரை குளிர் வாட்டுகிறது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் வனப் பகுதிகளில் குளிர் காற்று வீசிகிறது.
சத்தியமங்கலம், பண்ணாரி, கோபி, கவுந்தப்பாடி, சித்தோடு பவானி, அந்தியூர், பெருந்துறை, சென்னிமலை உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடும் குளிர் நிலவிவருகிறது.
Next Story






