search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    தங்க நகை மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது- போலீஸ் விசாரணையில் அம்பலம்

    போலீசார் ரவிபிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் திருட்டு சம்பவம் எப்படி நடந்தது? என தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
    ஓசூர்:

    ஓசூர் தாலுக்கா பாகலூர் அருகே எல்லையில் உள்ள கர்நாடக மாநிலம் சர்ஜாபுரா பகுதியில் தங்க நகைகள் திருடு போனதாக போலீசில் புகார் அளித்து மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

    சர்ஜாபுரா பகுதியை சேர்ந்தவர் ரவி பிரகாஷ் (வயது60). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ஜாபுரம் காவல் நிலையத்தில், தனது வீட்டில் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ தங்க நகைகள் திருடு போனதாக புகார் அளித்தார்.

    அந்தப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சர்ஜாபுரா போலீசார், திருட்டு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டும் திருட்டு சம்பவம் குறித்து எந்தவித துப்பும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. குற்றவாளிகளும் சிக்கவில்லை.

    இதனைத்தொடர்ந்து போலீசார் ரவிபிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் திருட்டு சம்பவம் எப்படி நடந்தது? என தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

    அதன்படி, ரவி பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என மொத்தம் 7 பேர் சேர்ந்து தங்களுக்கு சொந்தமான தங்க நகைகளை அடமானம் வைத்து விட்டு அதனை காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்து காவல் நிலையத்திலிருந்து தங்க நகைகளை மீண்டும் ரெக்கவரி மூலம் பெற்றுக்கொள்ளலாம் என மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    போலீசார் விசாரணையில், ரவி பிரகாஷ், அவரது மகன் மிதுன் குமார், மருமகள் சங்கீதா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என 7 பேரும், இந்த மோசடி சம்பவத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    ரவி பிரகாஷ் உள்பட இந்த 7 பேரும் தங்களது தங்க நகைகளை தீபக் மூலம் அங்குள்ள அடகு கடை ஒன்றில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர்.

    பின்னர் தங்களது வீட்டில் 1 கிலோ எடையுள்ள தங்க நகைகள் திருடு போனதாக சர்ஜாபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    போலீசார் திருட்டு நகைகள் குறித்து விசாரணை நடத்தி ஏதாவது ஒரு வழக்கில் கொள்ளையர்களிடம் இருந்து தங்க நகைகளை மீட்டால், அந்த நகைகளை தங்களுக்கு வழங்குவார்கள். அதனை பெற்று கொள்ளலாம், என்ற அடிப்படையில் இந்த மோசடி சம்பவத்தில் இவர்கள் அனைவரும் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல கர்நாடக மாநிலம் கே.ஆர். புரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்று புகார்கள் அளித்து காவல் நிலையங்களில் இருந்து தங்க நகைகளை இவர்கள் வாங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×