search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவக்கிணற்று மாதேஸ்வரன் கோவிலுக்கு வேண்டுதலுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்த உருவபொம்மைகள்.
    X
    நவக்கிணற்று மாதேஸ்வரன் கோவிலுக்கு வேண்டுதலுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்த உருவபொம்மைகள்.

    மாட்டுபொங்கலையொட்டி உருவபொம்மை வைத்து வழிபாடு செய்த பொதுமக்கள்

    ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி களிமண்ணால் செய்யப்பட்ட உருவபொம்மைகளை வனப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.
    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி களிமண்ணால் செய்யப்பட்ட உருவபொம்மைகளை வனப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள புஞ்சைதுறையம்பாளையம் கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது நவக்கிணற்று மாதேஸ்வரன் கோவில்.
     
    மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மாடு, யானை, நாய், மனிதன் உள்ளிட்ட உருவபொம்மை வைத்து சுற்றுவட்டார கிராம மக்கள் வனத்துறை அனுமதி பெற்று அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மாதேஸ்வரன் கோவிலுக்கு மாட்டுப்பொங்கல் அன்று கொண்டு சென்று வழிபாடு செய்வது வழக்கம்.

    இவ்வாறு களிமண்ணால் ஆன உருவ பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வதால் தங்களுக்கும், தங்கள் வீட்டில் வளர்க்கும் மாடு, ஆடு, நாய் உள்ளிட்டவைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழும் என்பது அக்கிராம மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் கொரோனாவைரஸ் பரவலால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் கோவிலுக்கு சென்று வழிப்பட தடைவிதித்துள்ளது. 

    இதனையடுத்து கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வருடம் மாட்டுப்பொங்கலான இன்று காலை புஞ்சை துறையம்பாளையத்தில் இருந்து அடர்ந்து வனப்பகுதியில் உள்ள நவக்கிணற்று மாதையன் வனக்கோவிலுக்கு ஒரு கிராமத்திற்கு 5 நபர் மட்டுமே அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    அதன்படி பங்களாப்புதூர், கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த குறைந்த நபர்களே அனுமதிக்கப்பட்டு மாடு, யானை உள்ளிட்ட உருவ பொம்மைகளை அலங்கரித்து பூஜை செய்து மேளதாளத்துடன் எடுத்து சென்று கோவில் முன்பு வைத்து வழிபாடு செய்தனர்
    Next Story
    ×