search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    காதலிக்க மறுத்த மாணவியை பிளேடால் வெட்டிய வாலிபர் கைது

    சேலத்தில் காதலிக்க மறுத்த மாணவியை பிளேடால் வெட்டிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த மாணவியிடம் சேலம் தளவாய்ப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 25) என்பவர் முதலில் பேச தொடங்கினார். பின்னர் நாளடைவில் மாணவியிடம் சிரித்து பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    ஒரு கட்டத்தில் மாணவியிடம் கோபாலகிருஷ்ணன், காதலிப்பதாக கூறி உள்ளார் . இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, என்னிடம் காதல்வலை வீச வேண்டாம், எனக்கு காதல் பிடிக்காது, என்னை பின்தொடர்வது, காதலிப்பதை விட்டு விடு, நான் பள்ளியில் படிக்க வேண்டும் என சொல்லி உள்ளார். ஆனால் கோபாலகிருஷ்ணன் கேட்கவில்லை.

    தொடர்ந்து மாணவியிடம் காதலிப்பதாக கூறி வந்துள்ளார். அவரது காதலை ஏற்க மறுத்து வந்த மாணவி, அவருக்கு பயந்து தன்னுடன் பள்ளியில் படிக்கும் சக மாணவிகளுடன் சேர்ந்து பள்ளிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் மாணவி கடந்த 10-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக ரோட்டில் நடந்து வந்து கொண்டிந்தார். அப்போது ரோட்டில் காத்திருந்த கோபாலகிருஷ்ணன் திடீரென வழிமறித்து மாணவியிடம் என்னை காதலிக்கிறாயா? இல்லையா? என வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.

    அதற்கு மாணவி, இது பற்றி அறிந்தால் எனது பெற்றோர் சத்தம் போடுவார்கள். நான் காதலிக்க மாட்டேன் என கூறினார். தொடர்ந்து இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கோபாலகிருஷ்ணன் திடீரென மாணவியின் கையை பிடித்து இழுத்து மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து கையை வெட்டினார்.

    இதனால் கையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. வலியால் அலறி துடித்தார். மாணவியின் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு கூடவே, கோபாலகிருஷ்ணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட மாணவி வீட்டுக்கு சென்று இது பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் உடனடியாக மகளை அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சேர்த்தனர். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து பெற்றோர் இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோபாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் கோபாலகிருஷ்ணனை ஆஜர்படுத்தி அவரை ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×