search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    புதுவை அருகே வேளாண் கூட்டுறவு வங்கி மானேஜர் தூக்குபோட்டு தற்கொலை

    புதுவை அருகே வங்கியில் கடன் பெற்றவர் திருப்பி செலுத்தாததால் ஜாமீன் கையெழுத்து போட்ட வேதனையில் வேளாண் கூட்டுறவு வங்கி மானேஜர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் அருகே அரியூர் குமரன் நகரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது54). இவர் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் (வங்கி) மானேஜராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கலா என்ற மனைவியும், தேவநாதன் (22) என்ற மகன், சுகந்தி(26) என்ற மகளும் உள்ளனர்.

    சுகந்தி பி.டெக் படித்து விட்டு அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். தேவநாதன் பி.டெக் படித்து விட்டு வேலை தேடி வருகிறார்.

    இதற்கிடையே குப்புசாமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் பணிபுரிந்த இளங்கோ என்பவருக்கு வங்கி மூலம் ரூ.3 லட்சம் கடன் பெற்றுக்கொடுத்தார். அதற்கு குப்புசாமி ஜாமீன் கையெழுத்து போட்டிருந்தார்.

    ஆனால் வங்கியில் பெற்ற கடனை இளங்கோ திருப்பி செலுத்தாமல் இருந்து வந்தார். இதனை பலமுறை இளங்கோவிடம் குப்புசாமி எடுத்துக்கூறி பணத்தை திருப்பி செலுத்தும்படி அறிவுறுத்தி வந்தார். ஆனால் குப்புசாமி பணத்தை செலுத்த முன்வரவில்லை.

    இதனால் குப்புசாமி தனது சம்பள பணத்தில் இருந்து கடனை செலுத்தி கொண்டிருந்தார். இதன் காரணமாக குடும்ப செலவுக்கு கூட பணம் இல்லாமல் குப்புசாமி கஷ்டப்பட்டு வந்தார்.

    இதனை குப்புசாமியுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் ஏளனமாக பார்த்து அவமதித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குப்புசாமி மனஉளைச்சலில் இருந்து வந்தார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். ஆனாலும் குப்புசாமி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இதனால் குப்புசாமி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

    நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் நள்ளிரவில் குப்புசாமி வீட்டின் குளியல் அறைக்கு சென்று அங்குள்ள ‌ஷவர் குழாயில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார் நேற்று காலை அவரது மனைவி கலா குளியல் அறைக்கு சென்ற போது அங்கு கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குப்புசாமியை தூக்கில் இருந்து மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குப்புசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் தேவநாதன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வங்கியில் கடன் பெற்றவர் பணத்தை திருப்பி செலுத்தாதால் ஜாமீன் போட்ட மானேஜர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×