என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்கோவிலூர் அருகே பஸ்சை வழிமறித்து டிரைவரை மிரட்டிய போதை ஆசாமி
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் இருந்து சங்கராபுரம் நோக்கி அரசு டவுன் பஸ் சென்றது. அந்த பஸ்சை டிரைவர் ஏழுமலை ஓட்டிச் சென்றார்.
இந்த பஸ் மணலூர்பேட்டை பாரத ஸ்டேட் வங்கி முன்பாக சென்று கொண்டிருந்தபோது திடீரென அரசு பஸ்சை குடிபோதையில் சங்கராபுரம் அருகே உள்ள பெரியமணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் வழிமறித்தார்.
பின்னர் பஸ்சில் ஏறி டிரைவரிடம் தகராறு செய்து நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டார். அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் பெரும் பீதிக்கு உள்ளாகினர். மேலும் பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளார். நடுரோட்டில் பஸ் நின்று போனதால் அந்த வழியே போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துப் போனது. இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் ஆனது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மணலூர்பேட்டை போலீசார் அரசு பஸ்சை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






