search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோசடி
    X
    மோசடி

    புதுவையில் இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.3 கோடி மோசடி- நிதி நிறுவன உரிமையாளரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

    புதுவையில் இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    திருத்தணியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தின் கிளைகள் புதுவையில் நெல்லித்தோப்பு, அரும்பார்த்தபுரம், கரிக்கலாம்பாக்கம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்தன. இந்நிறுவனம் சார்பில் தீபாவளி சீட்டு,புத்தாண்டு சீட்டு,மளிகை பொருட்கள் சீட்டு, குறிப்பிட்ட நாட்களில் பணம் இரட்டிப்பு என பல வகையான கவர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட் டன.

    இதை உண்மையென நம்பி ஏராளமானோர் அந்நிறுவனங்களில் முதலீடு செய்தனர். தொடக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி பணம் பட்டு வாடா செய்யப்பட்டது. பணம் இரட்டிப்பாக கிடைத்ததால் ஏற்பட்ட நம்பிக்கையை தொடர்ந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர்.அந்த வகையில் சுமார் ரூ.3 கோடிக்கும்மேல் முதலீடு செய்யப்பட்டதாக தெரிகிறது.

    இந்தநிலையில் கடந்த ஜீலை மாதம் முதல் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பித் தருவதை திடீரென நிறுவனத்தினர் நிறுத்தினர். அந்த நிதிநிறுவனத்தின் தகவல் தொடர்புகள் அனைத்தும் முடக்கப்பட்டது.

    இதனால் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் நெல்லித்தோப்பு கிளைஅலுவலகத்தில் வேலை பார்த்து வந்த புதுவை சாரதாம்பாள் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜேக்கப் வருண் பிரவீன் (வயது36) என்பவரிடம் முறையிட்டனர். இதுகுறித்து அவர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மெய்யழகனை (28) தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது வங்கியில் அதிக்கப்படியான பணம் செலுத்துவதில் சில சிக்கல் உள்ளது. விரைவில் சரியாகிவிடும் என தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் அந்த நிதிநிறுவனத்தின் இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் நெருக்கடி கொடுக்கவே ஜேக்கப் வருண் பிரவீன் அந்த நிதி நிறுவன உரிமையாளர் சிவநரேந்திரனை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அது முடியவில்லை.

    பின்னர் இதுகுறித்து ஜேக்கப் வருண் பிரவீன் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் நிதிநிறுவனத்தின் உரிமையாளர் சிவநரேந்திரன் சென்னையில் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து புதுவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் நிதிநிறுவன உரிமையாளர் சிவநரேந்திரனை போலீஸ் காவலில் எடுக்க இன்ஸ்பெக்டர் நியூட்டன் புதுவை கோர்ட்டில் அனுமதிகோரியிருந்தார். கோர்ட்டு அனுமதியளித்ததன்பேரில் சிவநரேந்திரனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பல்வேறு தகவல்களை கூறியதாக தெரிகிறது.

    அதன்பேரில் இதில் தொடர்புடைய மற்றொரு ஊழியர் பதுங்கியிருக்கும் இடத்தையறிந்த சி.பி.சி.ஐ.டி போலீசார் அந்த நபரை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    3 நாட்கள் காவல் முடிந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×