search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை பகுதியில் வெல்லம் உற்பத்தி பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
    X
    உடுமலை பகுதியில் வெல்லம் உற்பத்தி பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    பொங்கல் பண்டிகை உடுமலை ஆலைகளில் வெல்லம் உற்பத்தி தீவிரம்

    வெல்லம் உற்பத்தி செய்வதற்கு கரும்பு சாறு எடுத்தல், காய்ச்சுதல் என வெல்லம் உற்பத்திக்கான கிரசர் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏழுகுளம் மற்றும் அமராவதி பாசனத்தில் அதிக அளவு கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் தாங்கள் விளை நிலங்களிலேயே ‘கிரசர்’ ஆலை அமைத்து உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் வெல்லம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பொள்ளாச்சி சந்தை வழியாக அதிக அளவு கேரளாவுக்கும் விற்பனைக்கு  செல்கிறது.

    நடப்பாண்டு தொடர் மழை காரணமாக கரும்பு அறுவடை மற்றும் வெல்லம் உற்பத்தி பாதித்தது. தற்போது சீதோஷ்ண நிலை மாறியுள்ள நிலையில் பொங்கல் பண்டிகையும் நெருங்குவதால் கிரசர் ஆலைகளில் கரும்பு அரவை செய்து, கொப்பரையில் காய்ச்சி உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

    ஒணம் பண்டிகைக்கு 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1,200 வரை விற்றது. தற்போது விலை குறைந்து ஒரு சிப்பம் ரூ.1,100  முதல் ரூ.1,150  வரை மட்டுமே விற்று வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    ஒரு ஆண்டு பயிரான கரும்பு சாகுபடிக்கு ரூ.75 ஆயிரம்  வரை செலவு பிடிக்கிறது. மகசூல் குறைவு, காட்டுப்பன்றிகளால் பயிர் பாதிப்பு காரணமாக ஏக்கருக்கு 25 டன் வரை மட்டுமே மகசூல் கிடைக்கிறது. வெல்லம் உற்பத்தி செய்வதற்கு கரும்பு சாறு எடுத்தல், காய்ச்சுதல் என வெல்லம் உற்பத்திக்கான கிரசர் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது.

    ஒரு டன் கரும்பு ரூ.2,400 , வெட்டுக்கூலி, போக்குவரத்து செலவு ரூ.4 ஆயிரம்  வரை செலவு பிடிக்கிறது. ஒரு டன் கரும்புக்கு 120 கிலோ வெல்லம் உற்பத்தி செய்ய முடியும். வெட்டு கூலி, கிரசர் கூலி என உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில்  வெல்லம் விலை குறைந்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில மாதமாக பருவமழை தீவிரமாக பெய்ததால் ‘கிரசர்’ அமைத்து வெல்லம் உற்பத்தி செய்ய முடியவில்லை. தற்போது மீண்டும் உற்பத்தி தொடங்கியுள்ளது. கரும்பு வரத்தும் மகசூலும் குறைந்த நிலையிலும்  விலை உயராமல் உள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் உற்பத்தியும், விலையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×