search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து விழுந்தன
    X
    திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து விழுந்தன

    திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து விழுந்து விபத்து

    திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரியத்தின் 24 வீடுகள் அடியோடு சரிந்து விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
    திருவொற்றியூர்:

    சென்னை புறநகர் பகுதியான திருவெற்றியூரில்  4 மாடிகள் கொண்ட 336 குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ளன. 1993 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வீடுகள், தேனாம்பேட்டை திருவொற்றியூர் உள்பட சென்னை மாநகரின் பல்வேறு பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் இந்த வீடுகளில் கடுமையான விரிசல் ஏற்பட்டதாக இங்குள்ள பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருந்தனர். இதையடுத்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் சிறுசிறு பணிகளை மேற்கொண்டிருந்தனர். நேற்று இரவு 24 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு லேசாக விரிசல் ஏற்பட்டது. அந்த பகுதியில் இருக்கும் திமுக பகுதி செயலாளரிடம் பொதுமக்கள் இது குறித்து புகார் கூறினர்.

    இதையடுத்து இன்று காலை அந்த கட்டிடத்தின் உள்ளே இருந்தவர்கள் அவசர அவசரமாக  வெளியேற்றப்பட்டனர். காலை பத்து முப்பது மணி அளவில் திடீரென பெரிய சத்தத்துடன் அந்த வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் யாருக்கும் உயிர் இழப்பும் இல்லை என தெரிகிறது. இருப்பினும் ஒரு குழந்தை மட்டும் காணவில்லை என கூறப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து கீழ் மாடியில் குடியிருக்கும் டிரைவர் விஜயகுமார் கூறியதாவது: 

    நான் திருவொற்றியூர் ரெயில்வே காலனியில் குடியிருந்து வருகிறேன். கடந்த 2000ம் ஆண்டு எனக்கு இங்கு வீடு ஒதுக்கப்பட்டது. என் மனைவி இன்று வேலைக்கு சென்றுவிட்டார். என் குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்டனர். நான் சமையல் செய்து கொண்டிருந்தேன். அப்போது வீட்டில் இருந்து திடீரென சத்தம் எழுப்பியது. நான் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தேன். திடீரென வீடுகளும் தரையோடு பதிந்து விட்டன என அவர் கூறியுள்ளார்.

    அதே பகுதியில் குடியிருக்கும் திமுக பகுதி செயலாளர் திமுக அரசு கூறியதாவது:

    இந்த குடியிருப்பில் நான் 15 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறேன். நேற்று இரவு இந்த பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கு குடியிருப்பவர்கள் என்னிடம் புகார் கூறினார்கள்.

    நான் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கும் மின்சாரத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தேன். அவர்கள் இந்த இடத்தை வந்து பார்வையிட்டனர். காலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று புகைப்படமும் வீடியோவும் எடுத்துக் கொண்டிருந்தேன் அப்போது பெரிய சத்தத்துடன் அந்த குடியிருப்பு நாலு மாடியில் இருந்து அப்படியே கீழே சரிந்து விழுந்தது.

    இதில் அதிர்ஷ்டவசமாக நானும் பணியாளர்களும் உயிர் தப்பினோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×