search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலியல் தொல்லை
    X
    பாலியல் தொல்லை

    மாங்காடு மாணவி தற்கொலை: 25 பேரிடம் விசாரணை - செல்போன் மூலம் துப்புதுலக்குகிறார்கள்

    மாங்காடு அருகே பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் 25 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாங்காட்டில் தற்கொலை செய்து கொண்ட 11-ம் வகுப்பு மாணவியின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இன்று பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் மாணவியின் உடல் ஒப்படைக்கப்படுகிறது. கண்ணீர் மல்க மாணவியின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் காத்திருக்கிறார்கள்.

    மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. உதவி கமி‌ஷனர் பழனி, மாங்காடு இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவியின் தற்கொலையில் மறைந்துள்ள உண்மையை வெளிக்கொண்டு வர 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    தற்கொலை செய்து கொண்ட மாணவி 9-ம் வகுப்பு வரை வேறு ஒரு பள்ளியில் படித்துள்ளார். அந்த பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது மாணவி படித்து வந்த பள்ளியிலும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். 10மற்றும் 11-ம் வகுப்புகளில் மாணவியுடன் படித்த தோழிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆன்லைன் வகுப்பு நடைபெற்ற போது மாணவி செல்போன் பயன்படுத்தி உள்ளார். அந்த செல்போனை கைப்பற்றிய போலீசார் அதனை வைத்து விசாரித்து வருகிறார்கள்.

    அந்த செல்போனில் உள்ள குறுந்தகவல்கள் வீடியோக்கள் உள்ளிட்ட தகவல் பரிமாற்றங்களை வைத்து மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது யார் என்பதை கண்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இருப்பினும் மாணவி தனது கடிதத்தில் ஆசிரியர் மகன் என்று மட்டும் ஒருவரை குறிப்பிட்டுள்ளார். அவர் யார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்தான் மாணவியின் தற்கொலைக்கு மூல காரணமாக இருந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதையடுத்து அவரையும் மேலும் சிலரையும் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக 25 பேர் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை இன்று முடிவடைந்து உடல் ஒப்படைக்கப்பட்ட பிறகு மாணவியின் தற்கொலை வழக்கு விசாரணையின் வேகத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் முடிவில் மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×