search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பட்டா கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களிடம் வழிப்பறி - கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை தீவிர வேட்டை

    திருப்பூர் வடக்கு மற்றும் மத்திய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் வாக்கிங் செல்வது வழக்கம். அதுபோல் நேற்று காலை ஊத்துக்குளி ரோடு முதல் ரெயில்வே கேட் அருகே பொதுமக்கள்  பலர் வாக்கிங் சென்றனர்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2பேர் திடீரென பட்டா கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டியதுடன் அவர்களிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றுள்ளனர். இதில் மனோகர் என்பவரை பட்டா கத்தியால் குத்தி அவரிடமிருந்த செல்போனை பறித்தனர்.

    இதைப்பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்தப்படி ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். காயமடைந்த மனோகரை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
     
    இதேப்போல் மண்ணரை பகுதியில் பெண்ணை தாக்கி கொள்ளை முயற்சியில் மர்மநபர்கள் ஈடுபட்டனர். முன்னதாக கே.வி.ஆர். நகர் பகுதியில் ஒருவரை கத்தியால் குத்தி செல்போனை  பறித்துள்ளனர். 2 பேரை கத்தியால் குத்தி செல்போனை பறித்ததுடன், 3 பேரிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

    இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. திருப்பூர் வடக்கு மற்றும் மத்திய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். திருப்பூர் மாநகரில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொள்வதுடன், திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். 

    இந்தநிலையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க  மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின்பேரில் துணை கமிஷனர் ரவி மேற்பார்வையில் 5 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். 

    அதில் மர்மநபர்கள் 2பேர் பொதுமக்களிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கருமத்தம்பட்டி, கோவை, ஆனைமலை பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.
    Next Story
    ×