search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    தமிழக தலைமை செயலாளருக்கு பாராட்டு தெரிவித்த விஜயகாந்த்

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட தமிழக தலைமை செயலாளருக்கு தே.மு.தி.க. தலைவர் பாராட்டுகளை தெரிவித்து உள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ஆக்கிரமிப்புக்கு உள்ளான கோவில் நிலங்கள் மீட்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   இந்த நிலையில், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு சில நாட்களுக்கு முன்பு அரசு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தார்.

    தமிழகத்தில் தற்போது பணியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களையும், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் வருகிற 2022ம் ஆண்டு ஜனவரி 31ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கூறி இருந்தார்.

    இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இறையன்பு கூறி இருந்தார். இறையன்புவின் இந்த உத்தரவுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று, தமிழகத்தின் அனைத்து அரசு உயரதிகாரிகளும், தங்களது சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தாங்கள் வாங்கிய அசையா சொத்துகள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்களில் வாங்கிய சொத்துகள் பற்றிய விவரங்களை வருகிற ஜனவரி 31ந்தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளது வரவேற்கதக்கது.

    இதுபோன்ற செயல் வெளிப்படை தன்மையையும், ஊழல் இல்லாத நிர்வாகத்தையும், கொண்டு செல்ல வழிவகுக்கும்.  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்பவர்கள் நாட்டை வழிநடத்தும் உயர்ந்த பதவிகளில் பணியாற்றுகிறார்கள்.  அவர்களே வெளிப்படை தன்மையோடு தங்களை அடையாளபடுத்தி கொண்டால், அவர்களுக்கு கீழ் செயல்படும் மற்ற அதிகாரிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும்.

    இந்த நடைமுறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அனைத்து அரசு உயரதிகாரிகளும், தங்களது சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதுபோன்ற ஓர் அறிவிப்பை வெளியிட்ட தலைமை செயலாளர் இறையன்புவிற்கு தே.மு.தி.க. சார்பில் நன்றி. இந்த நடைமுறை பெயரளவிற்கு இல்லாமல் இதில் விடாமுயற்சியுடன், கண்டிப்புடன் செயல்பட்டால் வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகம் அமைவதில் ஐயம் இல்லை என்று விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×