search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    திருச்சி அருகே கோவில் வளாகத்தில் சாமியார் தலை சிதைத்து கொலை

    திருச்சி அருகே கோவில் வளாகத்தில் சாமியார் தலை சிதைத்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி முக்கண்பாலம், திருச்சி-மதுரை தேசியநெடுஞ்சாலையில் ஆதி சொக்கநாதர் சிவன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் கடந்த 2 வருடங்களாக நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவ்வப்போது வந்து செல்வார்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு சாமியார் போன்ற தோற்றம் கொண்ட அடையாளம் தெரியாத ஒருவர் கோவில் அருகில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் கத்தி, உளி, செம்பு உள்ளிட்ட பொருட்களை தனக்கு அருகிலேயே பரப்பி வைத்திருந்துள்ளார்.

    இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவரிடம் சென்று யார் நீங்கள், இங்கு ஏன் அமர்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டனர். ஆனால் அவர் அதற்கு முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் கோவிலுக்கு போலீசார் வந்தனர். அப்போது பொதுமக்கள் கூறியபடி, யாரும் அங்கு இல்லை. ஆனால் கத்தி, செம்பு உட்பட சில பொருட்கள் கிடந்ததை பார்த்து, அதனை எடுத்துக்கொண்டு, போலீசார் சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கோவில் வளாகத்தில் அந்த நபர் தலையில் பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். ரோஸ் கலரில் ஜிப்பா, மஞ்சள் கலரில் வேஷ்டி அணிந்திருந்தவர் பிணமாக கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    விரைந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

    மோப்பநாய், இறந்தவரின் உடலை மோப்பமிட்டு, நேற்று இரவு அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றது. சிறிது நேரத்தில் அங்கிருந்து, தாளம்பாடி சாலையில் சென்று நின்றது.

    இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார், அவரை கொலை செய்தவர்கள் யார்? என்ற பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×