search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    இளம்பெண்ணை கிண்டல் செய்த ஆட்டோ டிரைவர் கைது

    பொள்ளாச்சி அருகே பெண் பயிற்சி வக்கீலை பார்த்து கிண்டல் செய்த ஆட்டோ டிரைவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவர் வக்கீலுக்கு படித்து முடித்து விட்டு வக்கீலாக பயிற்சி பெற்று வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சியில் உள்ள மெக்கானிக் கடைக்கு சென்றார். அங்கு வேலை முடிந்ததும் இளம்பெண் மீண்டும் அங்கிருந்து ஜமீன் ஊத்துக்குளியை நோக்கி சென்றார். அந்த பெண் பொள்ளாச்சி காய்கறி மார்க்கெட் பகுதி வழியாக சென்ற போது அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவர் திடீரென இளம்பெண்ணை பார்த்து அடியே அழகி, பாத்துப் போடி என கூறியுள்ளார்.

    இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளம்பெண் உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்று அந்த வாலிபரிடம் எதற்கான என்னை பார்த்து நக்கல் செய்தாய் என கேட்டார். அதற்கு அந்த வாலிபர், அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அந்த பெண் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண் பயிற்சி வக்கீலை தவறாக பேசியது வேலம்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன்(வயது26) என்பதும், ஆட்டோ டிரைவராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×