என் மலர்
செய்திகள்

சுசீந்திரம் விடுதியில் பூச்சி மருந்தை குடித்து பெயிண்டர் தற்கொலை
சுசீந்திரம்:
சுசீந்திரம் அருகே உள்ள கற்காடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி செழியன். இவரது மகன் பூபதி(வயது33). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர், அங்கிருந்து ஊருக்கு வந்துவிட்டார். பின்பு வெளிநாட்டுக்கு திரும்பி செல்லாமல் இங்கேயே பெயிண்டராக வேலை பார்த்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை பூபதி சுசீந்திரத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். தனது நண்பர் ஒருவரும் வருவார் என்று கூறி தங்கியிருந்த அவர், நேற்று இரவு வரை அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் விடுதியின் உரிமையாளர் அறையின் கதவை தட்டிப் பார்த்தார்.
கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அறையின் உள்ளே இருந்து யாரும் சத்தம் கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், அது பற்றி சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அறையின் கதவை உடைத்து உள்ளேசென்று பார்த்தனர்.
அப்போது அங்கு வாயில் நுரை தள்ளிய நிலையில் பூபதி பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பூபதியின் செல்போனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் யாருக்கெல்லாம் போனில் இருந்து பேசியுள்ளார்? யாரிடம் அதிகநேரம் பேசியிருக்கிறார்? என்று ஆய்வு செய்தனர்.
அதில் சிலரிடம் அதிக நேரம் பேசியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூபதிக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆகவே அவருக்கு அவரது குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்து வந்திருக்கின்றனர்.
தீவிரமாக பெண் பார்த்து வந்த நிலையில், கடந்த 16 நாட்களுக்கு முன்பு அவரது தாத்தா இறந்துவிட்டார். இதனால் பூபதிக்கு பெண் பார்ப்பதை அவரது குடும்பத்தினர் நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் பூபதி தற்கொலை செய்திருப்பதால் காதல் விவகாரம் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






