search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    தமிழகத்தில் சமூகநீதியை நாம் தான் மீண்டும் நிலை நிறுத்தப் போகிறோம் - தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

    தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஏற்படுத்தியதே நாம் தான் என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.50 சதவீத இட ஒதுக்கீடு சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருப்பது, அந்த இட ஒதுக்கீட்டை தங்களின் முன்னேற்றத்திற்காக நம்பியிருந்த பாட்டாளி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு தரப்பினர் அதைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மை என்பது. ஒட்டு மொத்த தமிழகத்தின் சமூக நீதிக்கும் இது குறித்த உயர்நீதி மன்றத் தீர்ப்பு உலை வைத்திருக்கிறது என்பது தான்.

    வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள 10.50 சதவீத இட ஒதுக்கீட்டை செல்லாது என்று அறிவிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள 7 வினாக்களையும், அவற்றின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பில் விவரித்துள்ள அம்சங்களையும், எந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக முன் வைத்தாலும், அந்த இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியாது என்பது தான் உண்மை.

    சென்னை உயர்நீதிமன்றம்

    தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு விடக்கூடாது என்பது இன்று பலரின் விருப்பமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஏற்படுத்தியதே நாம் தான்.

    அதற்காக நாம் இழந்தவை 21 உயிர்கள் உட்பட ஏராளம்; நாம் செய்த தியாகங்கள் ஏராளம், ஏராளம். தென்னிந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கேரளத்தில் 8 பிரிவுகளாகவும், கர்நாடகத்தில் 6 பிரிவுகளாகவும், ஆந்திரத்தில் 5 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் விடுதலைக்குப் பின்னர் 42 ஆண்டுகள் வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஒரே பிரிவாகத்தான் இருந்தது. பிற்படுத்தப்பட்டோருக்கு தொகுப்பு முறையில் இட ஒதுக்கீடு வழங்க எந்த அமைப்பும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

    தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவைப் போராடிப் பெற்றுக் கொடுத்ததும் நாம் தான். இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர்களுக்கும் உள் இட ஒதுக்கீட்டை கிடைக்கச் செய்ததும் நாம் தான். வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்ததும் நாம் தான். தமிழகத்தில் சமூகநீதியின் முன்னோடி நாம் தான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

    சமூகநீதியை பாதுகாப்பதற்காக அடுத்தக்கட்ட சட்டம் மற்றும் அரசியல் போருக்கு ஆயத்தமாக வேண்டிய தருணம் நமக்கு வந்திருக்கிறது. அதற்கு பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். சமூக நீதிக்கு எதிரான சக்திகள் தோண்டிய பள்ளத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மட்டும் வீழ்த்தப்படவில்லை.

    எல்லா இட ஒதுக்கீடுகளும் வீழ்ச்சியின் விளிம்பில் தான் உள்ளன. கடந்த காலங்களைப் போலவே தமிழகத்தின் வன்னியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான சமூக நீதியையும் நாம் தான் நிலைநிறுத்தப் போகிறோம். தமிழ்நாட்டில் நான்கு வகையான இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்த நம்மால் தான் இது சாத்தியமாகும். அதனால், வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து எவரும் கவலைப்பட வேண்டாம் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.

    இதையும் படியுங்கள்...அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலுக்கு விரைவில் அறிவிப்பு: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தீவிரம்

    Next Story
    ×