என் மலர்
செய்திகள்

ஆசனூர் அருகே மலைப்பாதையை கடந்து சென்ற சிறுத்தை
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது பெய்த மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாக காணப்படுகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்து உள்ளது. இந்த சாலையில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் உணவு தேடி வன விலங்குகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வது தொடர் கதையாகி வருகிறது.
வழக்கமாக கரும்புக்காக யானைகள் சாலை ஓரம் முகாமிட்டு இருக்கும். இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக சென்று வருவார்கள்.
இந்நிலையில் நேற்று மாலை ஆசனூர் அடுத்த தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் என்ற பகுதியில் வழக்கம் போல் வாகனங்கள் வந்து சென்றது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் வனப்பகுதியில் இருந்து ஒரு சிறுத்தை வெளியேறி வந்தது. இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை அப்படியே நிறுத்திக் கொண்டனர்.
வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை சாலையை கடந்து சென்றது. அப்போது வாகனத்தில் இருந்தபடியே சிலர் சிறுத்தையை போட்டோ எடுத்தனர். ரோட்டில் சிறிது நேரம் நின்று கொண்டு இருந்த சிறுத்தை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து வாகனங்கள் அனைத்தும் புறப்பட்டு சென்றது.






