search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலியான மகேந்திரன், கவின் பிரகாஷ்.
    X
    மின்சாரம் தாக்கி பலியான மகேந்திரன், கவின் பிரகாஷ்.

    சத்தியமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி

    சத்தியமங்கலம் அருகே இன்று தோட்டத்தில் பூ பறிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சத்யமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த சிவியார் பாளையத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 50). விவசாயி. இவரது மகன் கவின் பிரகாஷ் (24). இவர் கல்லூரி படிப்பை முடித்து தந்தையுடன் இணைந்து விவசாயம் செய்து வந்தார். மகேந்திரனுக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாயத் தோட்டம் உள்ளது. அங்கு சம்பங்கி பூ உள்ளிட்டவை பயிரிடப்பட்டு இருந்தது. நேற்றிரவு சத்தியமங்கலம் பகுதியில் லேசான மழை பெய்திருந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் மகேந்திரன் தனது தோட்டத்திற்கு சென்று சம்பங்கி பூ பறிக்க சென்றார். தோட்டத்தின் நடுவே மின் கம்பி ஒன்று இருந்தது. நேற்று இரவு அந்த மின் கம்பியில் இருந்து வயர் அறுந்து கீழே விழுந்துள்ளது. இதைக் கவனிக்காமல் சென்ற மகேந்திரன் கீழே கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளார்.

    இதில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். நீண்ட நேரமாக தந்தை வீட்டுக்கு வராததால் தந்தையை தேடி கவின் பிரகாஷ் காலை 8.30 மணியளவில் தோட்டத்திற்கு சென்றார். அங்கு தந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கவின் பிரகாஷ் தந்தையை தொட்டார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கவின் பிரகாசம் இறந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்து அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். மேலும் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தந்தை, மகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை, மகன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×