search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
    கடலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும், திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வீரலூரை சேர்ந்த ஏழுமலை மகன் மாரிமுத்து (வயது 25) என்பவரும் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பஞ்சு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்தனர். அப்போது இருவரும் பேசி பழகி வந்தனர்.

    இதையடுத்து மாரிமுத்து அந்த சிறுமியிடம் அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி வந்தார். இந்த விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் அந்த சிறுமியை கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மலைமேடு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்க வைத்தார்.

    அந்த சிறுமி அங்கு 15 நாட்களாக தங்கி இருந்த நிலையில், இதை அறிந்த மாரிமுத்து கடந்த 7.7.2018 அன்று மலைமேடு கிராமத்திற்கு வந்து சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்று, மறுநாள் இரவு நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறி, அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதுபற்றி சிறுமியின் உறவினர் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் மாரிமுத்து மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

    Next Story
    ×