என் மலர்
செய்திகள்

விபத்து பலி
மீமிசல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- ஒருவர் பலி
மீமிசல் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
கோட்டைப்பட்டினம்:
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள ஆத்திவயல் பகுதியை சேர்ந்தவர் ஈசாக். இவரது மகன் சுரேஷ் (வயது 37). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோட்டைப்பட்டினம் நோக்கி நேற்று வந்து கொண்டிருந்தார். ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள யாக்கூப் ஹசன்பேட்டை அருகே வந்த போது எதிரே கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் கார்த்திக் (23) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், சுரேஷ் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். கார்த்திக் படுகாயம் அடைந்தார். விபத்தை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து படுகாயமடைந்த கார்த்திக்கை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






