search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகுமார்
    X
    சிவகுமார்

    சீட்டு விளையாடியபோது போலீஸ் வருவதாக நினைத்து ஓடியவர் கிணற்றில் தவறி விழுந்து பலி

    போலீசார் வருவதாக நினைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் பயந்து அங்கிருந்து வேகமாக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த தரை கிணற்றில் சிவகுமார் தவறி விழுந்துள்ளார்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சாமியார்மலை, எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் சிவகுமார் (வயது 38). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் குடியாத்தத்தை அடுத்த கன்னித்தோப்பு பின்புறமுள்ள ஒரு தோப்பில் சீட்டு விளையாடி உள்ளார். அப்போது அந்த வழியாக ஒரு வாகனம் வந்துள்ளது.

    உடனே போலீசார் வருவதாக நினைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் பயந்து அங்கிருந்து வேகமாக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த தரை கிணற்றில் சிவகுமார் தவறி விழுந்துள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி விட்டார். மற்றவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

    இரவு வெகுநேரமாகியும் சிவகுமார் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர் உடனடியாக சிவகுமாரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. நேற்று காலையில் மீண்டும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் சிவகுமாரை தேடினர்.

    அப்போது சிவகுமாரின் செருப்புகள் கிணற்றில் உள்ள தண்ணீரில் மிதந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புத் துறையினர் சென்று அந்த கிணற்றில் இறங்கி சிவகுமாரை தேடினர். சுமார் ஒரு மணி நேரத்திற்குபிறகு சேற்றில் சிக்கியிருந்த சிவகுமாரின் உடலை மீட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் கே.பிச்சாண்டி, ஏட்டு கல்பனா உள்ளிட்டோர் சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×